தமிழ்நாட்டில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் இதற்கான சாட்சி எனக் குறிப்பிட்டு, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தார்.
இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு வெற்றிக் கழகம் தனது அறிக்கையில், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய ஆளுநர் தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளது.
மேலும், மனுவில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது திரு.விஜய் அவர்கள் ஆளுநருக்கு திருக்குறள் நூலை வழங்க, அதற்கு பதிலாக ஆளுநர் “கால வரிசையில் பாரதியார் படைப்புகள்” நூலை வழங்கினார்.