சென்னை: சென்னையில் புத்தாண்டு நாளில் பட்டாசுகள் வெடிக்க முழுமையாக தடை விதித்துள்ளது காவல்துறை. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் கொண்டாட்டங்களுக்கு போலீஸ் அனுமதி அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு நாளில் சென்னையின் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் முக்கிய பகுதிகள், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை சோதிக்க குழுக்கள் செயல்படும். இது மட்டுமல்லாமல், பைக் ரேசிங் தடுக்கும் நோக்கில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினா, சாந்தோம், நீலாங்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் மக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார், குதிரைப்படைகள் மற்றும் ATV வாகனங்களை கொண்டு கடற்கரை பகுதியை கண்காணிக்கவுள்ளனர்.
முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சென்னையின் முக்கிய சாலைகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் மெகா ஸ்பீக்கர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. பட்டாசு வெடிக்கும் நடவடிக்கைகளை முழுமையாக தடுக்கும் நோக்கத்துடன் சென்னைக் காவல்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.